சனி, 21 ஜனவரி, 2012

காதல்

திருமணத்திற்கு முன்
நீ அழகாகத் தெரிந்தாய் ...
ஆனால்
திருமணத்திற்கு பின்
நம்மை சுற்றியுள்ள எல்லாமே
அழகாகத் தெரிகிறது

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

தியாவுக்கு இன்று பிறந்த நாள்

இன்று (10-04-2010)பிறந்த நாள் கொண்டாடும் தியாவுக்கு
எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


நிகேதா (மனைவி)
அக்ஷிகா (மகள்)

வியாழன், 4 மார்ச், 2010

பெண்ணே உனக்கே உனக்காய்
























அடங்கி அடங்கி
ஆண்டாண்டு காலமாய்
அடுப்பங்கரையே உன் உலகமென்று
முடங்கிக் கிடந்தது போதும்.
புதுமைகள் அறிந்து
பழமைகள் களைந்து
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
சாதனை படைக்க - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து வா

நதியென்றும் மலரென்றும்
நிலவென்றும் அமுதென்றும்
போகம் தரும் காதற் பொருளாய்
கவிஞர் உன்னைக் கண்டது போதும்
சரித்திரம் படைக்கும் புயலாய்
அறியாமை களையும் தீயாய்
அகிலம் உனைக்காண
அடங்காத வேகத்துடன் - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து வா

பின் தூங்கி முன்னெழுந்து
தலை கோதி அடி வருடி
அருகிருந்து தூங்க வைத்து
தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும்
துணைவியாய் மட்டும் - நீ
வாழ்ந்தது போதும்
அடக்கு முறைகளை உடைத்து எறிந்து
அடிமை வாழ்வின் சங்கிலி அறுத்து
அறிவியல் உலகின் சாதனைப் பெண்ணாய்
உலகம் உனைக்காண - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து
வா


புதன், 24 பிப்ரவரி, 2010

திசைமாறிய காதல்




அவளுக்கும் அவனுக்கும் இடையில் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழும் என்று அவன்எதிர்பார்க்கவில்லைத்தான்.. அதுவும் இப்படி ஒரு கோலத்தில் ..... பல காரணங்கள் சொல்லி என்னை தூக்கி எறிந்து விட்டு போனாலும் அவள் எண்ணியபடி எங்கோ வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்றுதான் அவன் எண்ணியிருந்தான் .

ஆனால் இன்று .....

ஒட்டிய உடலும் காய்ந்த முகமும் ஆளுக்கு படிந்த ஒரு பழைய புடைவையும் ஒழுங்காக வாரப்படாத தலையும் திலகமில்லா நெற்றியும் ....... அவளை அடையாளம் காண்பதே குமாருக்கு கடினமானதாக இருந்தது . மஞ்சள் நிறமும் குழிவிழும் அழகிய கன்னமும் நீண்ட விழிகளும் நேர்த்தியான உடையும் அளவான ஒப்பனையும் ஒருங்கே இணைய ஒரு தேவதைபோல் துள்ளித்திரிந்த கௌரியா இது ...

காலம் ஒருவரது கோலத்தைகூட இப்படி மாற்றிவிடுமா .... திகைப்பாக இருந்தது குமாருக்கு . குமாரும் கௌரியும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதை விட அருகருகே வீட்டையும் உடையவர்கள் .சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில்
பயின்றவர்கள்.

நினைவு தெரிந்த நாள்முதல் கௌரியுடன்தான் அவனது அதிக பொழுதுகள் கழிந்திருக்கின்றன . சின்ன வயதில் தொடங்கிய நட்பு என்பதால் யாரும் இவர்களை சந்தேகிக்கவில்லை . இவர்கள் நட்பிற்கு தடை போடவும் இல்லை . இதனால் பள்ளிக்காலத்தில் தொடங்கிய நட்பு பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தது.

நல்ல நண்பர்களாகவே பட்டப் படிப்பை முடித்து வெளியேறினர் . கௌரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமலே குமார் அவள் மீது காதல் கொண்டான் . அவளும் தன்னை ஏற்றுக்கொள்வாள் என்று நம்பினான் .

நமது நாட்டை பொறுத்தவரை படிப்பதை விட வேலை ஒன்றை தேடுவதே மிகவும் கடினமான செயல் . அனால் இவர்களின் நல்ல நேரம் வேலையில்லா பட்டதாரி என்ற பட்டம் வாங்கும் முன்னரே இருவருக்கும் அதே ஊரிலேயே ஆசிரிய நியமனமும் கிடைத்து விட்டது.

எனியும் தாமதிப்பது நல்லதல்ல .தனது காதலை கௌரியிடம் சொல்லிவிட வேண்டும் . இதைக்கேட்டால் கௌரி சந்தோசத்தில் குதிப்பாள் என்று எண்ணிக்கொண்டே கௌரியை தேடிச்சென்றான் குமார் .

அன்று வெள்ளிக்கிழமை . எப்படியும் கௌரி கோயிலுக்கு வருவாள் என்பது அவனுக்கு தெரியும் . அவன் நினைத்தது போலவே கௌரி கோயிலில் தான் நின்றாள். அவள் பிரார்த்தனை முடியும்வரை காத்திருந்தான் குமார் .

குமாரை கண்ட கௌரி " என்ன குமார் அதிசயமாய் கோயில் பக்கம் வந்திருக்கிறியள் .எனி சூரியன் மேற்கிலதான் உதிக்கும் போல இருக்கு " என்று கேட்டாள். அவளின் கேள்வி நியாயமானதுதான் . அவன்தான் எப்பவும் கோயில் பக்கம் போவதில்லையே .

"இல்லை கௌரி உன்னைத்தான் பார்க்க வந்தனான் "

" என்னையா " ஆர்வமாக கேட்டாள் கௌரி .

" ஓம் கௌரி உன்னுடன் கொஞ்சம் தனிய கதைக்க வேணும் "

"அதுக்கென்ன இப்ப நாங்கள் இருவரும் தனியத்தான இஞ்ச நிக்கிறம். எதுவெண்டாலும் சொல்லுங்கோ " என்றாள்.

என்றும் இல்லாதபடி இன்று முதன்முதலாக அவளோடு பேசும்போது வார்த்தைகள் தடுமாறின .இத்தனை நாள் பழகி இருந்தும் காதல் என்று வந்ததும் ஏன் மனம் இப்படி குழந்தையாகிபோகிறது என்று அவனுக்கு புரியவில்லை .

''அது வந்து வந்து கௌரி .....நான் உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் .
உனக்கு சம்மதமா ? அவசரமில்லை நீ பதிலை யோசித்து ஆறுதலாய் சொல்லு .'

என்று பெரும் பிரயத்தனத்திற்கு பின் ஒருவாறு கூறி முடித்தான்.

அவள் கல கல என சிரித்தாள். இப்படி ஒரு பிரதிபலிப்பை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதுவரை அவளின் சிரிபுக்கெல்லாம் அர்த்தம் கண்ட அவனால் இன்று அவளின் சிரிப்புக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்க முடியவில்லை .

''என்ன கௌரி ஏன் இப்படி சிரிக்கிறாய் '' குழப்பத்துடன் கேட்டான் குமார் .

''குமார் வாழ்க்கையில் எதிர்பார்ப்பு இருக்கலாம் ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை மட்டும் இருக்க கூடாது. உங்கட குடும்பம் ஒரு நாள் சாப்பாட்டுக்கே முட்டி மோதிக்கொண்டு இருக்கேக்க என்னை போல ஒரு அழகான வசதியான பெண்ணை வாழ்க்கை துணையா அடைய வேண்டும் என ஆசைப்படுவது தப்பா தெரியலையா ?ஏதோ கூடப்படிக்கிறவன் என்று சகஜமாய் பழகினா உடன காதல் என்று முடிவு செய்து விடுவீர்களா ''


''கௌரி நீ சொல்வது சரிதான் நாங்கள் கஸ்டப்பட்டவர்கள் தான். ஆனால் இப்பத்தான் எனக்கு வேலை கிடைத்து விட்டதே. உன்னை வைத்து காப்பாற்ற என்னால் முடியும் .'' என்றான் குமார் .

''எப்படி வைத்து காப்பாற்றுவாய் உன்ர சம்பளம் எனக்கு ஒரு பவுண் நகை வங்க கூட காணாது. மாதக் கடைசியில காசுக்கு எத்தின பேரிட்ட போய் நிக்க வேண்டி வருமோ ..

இப்படி காலம் முழுக்க வாழ்க்கையில போராட என்னால முடியாது. என்னைப் பொறுத்தவரை பெரிய வீடு வெளியில் போய் வர கார் கைநிறைய பணம் எடுபிடிக்கு ஒரு வேலையாள் இப்படி எல்லாம் உள்ள ஒருவன்தான் எனக்கு வாழ்க்கை துணையா வரவேணும் அதுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன். எனியும் காதல் மொழி பேசிக்கொண்டு என்னை தேடி வராதே ''

என்று கூறிவிட்டு போய்விட்டாள் கௌரி .

அந்த சம்பவத்திற்கு பிறகு அவன் கௌரியை பார்க்க போகவில்லை. சில மாதங்களில் கௌரி திருமணம் நிச்சயமாகி வெளிநாடு சென்று விட்டாள். கௌரியின் கணவன் வெளிநாட்டில் சொந்தமாக ஒரு தொழில்நிறுவனம் வைத்திருக்கிறாராம் . மிகவும் வசதியான இடமாம் என்று ஊரில் உள்ளவர்கள் பேசிக்கொண்டனர் .

கௌரிக்கு நினைத்தது போலவே வாழ்க்கை அமைந்து விட்டதை எண்ணி குமார் சந்தோசப்பட்டான் .

கால ஓட்டத்தில் குமாரும் ஒரு பெண்ணை திருமணம் செய்து சந்தோசமாக வாழத்தொடங்கினான். வருடங்களும் நான்கை கடந்து விட்டிருந்தத்து. இன்று வேலை முடிந்து வரும் போதுதான் கௌரியை வழியில் சந்தித்தான். தன் பழைய தோழி என்ற முறையில் அவளை அப்படியே கடந்து போக அவன் மனம் விரும்பவில்லை. அவளது தோற்றம் வசதியான வாழ்க்கையை வெளிப்படுத்தியிருந்தால் அவன் தன்பாட்டில் கடந்து போயிருப்பான். ஆனால் அவளது கோலம் அவனை அப்படியே அங்கே நிற்க வைத்து விட்டது .

'' என்ன கௌரி இது.. நீ எப்படி இங்கே ...''

அன்று பட பட என பேசிய கௌரியால் இன்று அவனது முகத்தை பார்த்து பேச முடியவில்லை. இப்போது மௌனம் மட்டுமே பேசியது. கண்ணீர் அவளையும் மீறி தெறித்து பாய்ந்து கொண்டிருந்தது .

''என்ன கௌரி என்ன நடந்தது . நீ நல்ல இடத்தில்தானே வாழ்க்கைப்பட்டாய் பிறகு ஏன் இப்படி ஒரு கோலம் ''
குழப்பமாய் கேட்டான் குமார் .

''குமார் என்னை மன்னிச்சிடுங்க உங்களிற்கு முன்னால் நின்று பேசிற தகுதி கூட எனக்கு இல்லை வாழ்க்கையில் பணம்தான் முக்கியம் என்று நினைத்து ஓடினன்.
பணம் நிறைய இருந்தது ஆனால் அங்கு சந்தோசம் இருக்கவில்லை . என் கணவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளிற்கு சொந்தமானவர் . அவரோடு என்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை எங்களிற்கு விவாகரத்தும் ஆகி விட்டது .அங்கு இருக்க பிடிக்கவில்லை .அதுதான் திரும்பவும் ஊருக்கே வந்து விட்டேன் ''

"என்ன கௌரி இது விசாரித்துப் பார்க்காமலா திருமணத்துக்குச் சம்மதித்தீர்கள்"

"தரகர்தான் இந்த வரணைக் கொண்டு வந்தார் நல்ல இடம் என்றார். நானும் வெளிநாட்டு மோகத்தில் உடனேயே சம்மதம் சொல்லி விட்டேன். அவசரத்தில் எடுத்த முடிவு என் வாழ்க்கையைச் சீரழித்து விட்டது. விடுங்கோ குமார் பணத்துக்காக அலையும் என்போன்ற பெண்களுக்கு இதுதான் சரியான பாடம்..."

குமாருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவளே தொடர்ந்தாள்.

"குமார் முடிந்தால் எனக்கு எங்கேயாவது ஒரு வேலை எடுத்துத் தாங்கோ. காலம் முழுக்க உங்களுக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன்."

"சரி கௌரி நான் வேலைக்கு முயற்சி செய்கிறேன். நேரமாகுது பாவம் மனைவி சாப்பிடாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா நான் போய்ட்டு வாறன். ஏதாவது வேலை இருந்தால் நான் உங்களை வீட்டில் வந்து பார்க்கிறேன்."

என்று கூறிவிட்டு நகர்ந்தான் குமார்.

"மனைவி மீது இப்படிப் பாசமழை பொழியும் ஒரு நல்லவரை தூக்கி எறிந்து விட்டேனே பணத்தையும் அந்தஸ்தையும் கணக்குப் போட்டுப் பாத்துவாழ்க்கையை வாழத்தெரியாத எனக்கு இதுதான் சரியான பாடம்"

என்று எண்ணியபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் கௌரி.......................



ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

காதலுடன்



உன் ஒற்றைப் பார்வையால்
என் நெஞ்சைக் கொள்ளையடித்தவனே
சந்தித்த முதல் நாளே
விழியில் விழுந்து
என் பார்வையானவனே
வார்த்தைகள் தேவையில்லை
அன்பை உணர்த்த
புன்னகை மட்டும்
போதுமென்று
புரிய வைத்தவனே.
ஆயுள் வரைக்கும்
உன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்



***********காதலர் தின வாழ்த்துகள் *****************

சனி, 2 ஜனவரி, 2010

குழந்தை



நீ கசக்கி எறியும்
கடதாசிப் பூக்களும்
கிழித்துப் போடும் - என்
விரிவுரைக் குறிப்புகளும்
உடைத்து எறியும் - உன்
விளையாட்டுப் பொருட்களும்தான்
இப்போதெல்லாம்
நம் வீட்டை அழகுபடுத்துகின்றன.